
மாநில அரசின் தேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உள்ளாட்சித்தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள்
அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் தமிழ்நாடு அரசு
ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது
உள்நோக்கம் கொண்ட வஞ்சகத்திட்டமாகும்.
தேர்தலையே தள்ளிப்போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக்
கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்து விட்டு, தி.மு.க.
மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த
சூழ்ச்சியாகும். மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக
அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழக
அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-
உள்ளாட்சி
அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
ஆணையத்தின் அறிவிப்பு என்பது தேர்தலை நடத்தவா? நிறுத்தவா? என்ற
கேள்வி எழுகின்றது. சிற்றூராட்சி, வட்டார
ஊராட்சி, மாவட்ட
ஊராட்சி ஆகிய அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும் என்றும் அவையும் இரண்டு
கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடத்த வேண்டிய
அவசியம் ஏன் ஏற்பட்டது?
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் குறித்தும்
மாவட்ட ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்துவது குறித்தும் எவ்வித தெளிவும் இல்லை.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி
அமைப்புகளுக்கான தேர்தல் பின்னர் நடதப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த விருப்பம்
இல்லாத அ.தி.மு.க. அரசு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துவதற்கான வழிவகைகளை
உருவாக்கி வருகின்றது. இத்தகைய குழப்பங்களின் காரணமாக நீதிமன்றத்தால் தேர்தல்
நிறுத்தப்பட்டால் பிறர் மீது பழி சுமத்தி தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று
அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.
முதலமைச்சர் பழனிசாமியின் விருப்பத்தை நிறை வேற்றக் கூடியவராக
தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டு வருகின்றார் என்று கருதும் அளவிற்கே தேர்தல்
ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்பு தேர்தலை
நடத்துவதற்காக அல்ல. மாறாக,
ஆளும் கட்சி தேர்தலை நடத்திட வேண்டாம் என்கிற
விருப்பத்தை நிறைவேற்றிடக் கூடிய அறிவிப்பாகும்.
கிராமம்,
நகரம் என்று வேறுபாடின்றியும், புதிய
மாவட்டங்களையும் இணைத்து ஒரே நாளில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான
தேர்தலை நடத்திட,
தமிழ்நாடு அரசும், தேர்தல்
ஆணையமும் முன் வரவேண்டும்.
இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.