அணுஆயுத சோதனைக்காக எரிபொருள் உற்பத்தியை வடகொரியா ரகசியமாக சமீபத்தில் அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ட்ரம்ப் கிம் இடையே சிங்கபூரில் நடந்த உச்ச மாநாட்டுக்குப் பிறகு இனி அணுஆயுத சோதனை ஈடுபட போவதில்லை என்று வடகொரியா உறுதி அளித்த நிலையில் இந்த தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறை தரப்பில், “வடகொரியா சமீப காலமாக அணுஆயுத சோதனைக்காக யுரேனியத்தை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறது. வகொரிய அமெரிக்காவை ஏமாற்றி வருவதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன” என்று கூறியுள்ளது.
இதுபற்றி ட்ரம்ப் தரப்பிலிருந்துகருத்து தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து உறுதியான தகவல் கிடைத்தப் பிறகு கருத்து தெரிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே மிகவும் கடுமையான வார்த்தை மோதல் நடந்தது.
இரு நாடுகளும் தங்கள் ராணுவ பலம் மற்று அணு ஆயுத பலத்தை ஒப்பிட்டு வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. அத்துடன் வடகொரியா மீது ஐ.நா. சபை பொருளாதாரத் தடை விதித்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ட்ரம்பும் – கிம்மும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் கேபெல்லா ஓட்டலில் ஜூன் 12 ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய ட்ரம்ப் வடகொரியாவிடமிருந்து அணு ஆயுதங்கள் குறித்த எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் வடகொரியாவின் அணு ஆயுதங்களால் அசாதரண அச்சுறுத்தல் இருப்பதாக ட்ரம்ப் கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியு நிலையில் இத்தகைய தகவலை அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது