பயிர்க்கடன் தள்ளுபடி , வறட்சி நிவாரணம் , காவிரி மேலாண்மை அமைப்பு , நதிநீர்ள்ளி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடியும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும், வறட்சியை சித்தரிக்கும் வகையில் எலியை வாயில் கவ்வியபடியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சங்கு ஊதி தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.
இதனிடையே, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இன்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்தனர். அப்போது, விவசாய கடன் தள்ளுபடி செய்யவும் விவசாய வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவவேண்டும் என்றும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்
பின் தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜெட்லியை சந்தித்ததில் மன நிறைவு அடைந்துள்ளோம். எங்களை அமரவைத்து, கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். இதையடுத்து, எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.இதையடுத்து, விவசாயிகள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துள்ளனர்.